உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு மிகுதியாகக் காணப்படுகிறது. இதைச் சரி செய்யும் நோக்கில், இந்தியா ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வானது ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம், ஹம்போல்ட் பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது.
ஆய்வின் ஒரு பகுதியாக, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள மலைவாழ் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் காடுகள் நிறைந்த மாவட்டங்களில், 570 வீடுகளில் இருந்து உணவு குறித்த மாதாந்தரத் தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர். இங்குள்ள பெண்கள் தங்களது உணவாக காட்டில் விளைவிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்வதால், உடலில் அதிகமான நன்மைகள் ஏற்படுவது தெரிய வந்தது. குறிப்பாக மலைத்தேன், தக்காளி, கோவைக்காய், கிழங்குகள், கேரட், பெருஞ்சீரகம், பீன்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதால், சராசரி ஊட்டத்தைவிட மலைவாழ் பெண்களிடம் ஊட்டச்சத்துகள் அதிகளவில் காணப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
ஊட்டச்சத்து நிறைந்த பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுபவர்களைவிட , காட்டுப்பகுதி உணவில் அதிகமாக ஊட்டச்சத்து இருப்பதாகக் கூறும் ஆய்வு, மலைவாழ் பெண்களிடம் ஊட்டச்சத்தானது 9% முதல் 13% வரை அதிகமாக காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மலைவாழ் குடும்பங்களும், காடுகளை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்களும் காட்டில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களையே பெரிதும் நம்பியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கொள்கை வகுப்பாளர்களின் விவாதங்கள் மற்றும் தலையீடுகள், நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இதனால், காட்டில் சேகரிக்கப்பட்ட உணவுகளின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகிறது. கிராமப்புற ஏழைகளுக்கு தரமான ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான ஆரோக்கியமான தேர்வினை கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்த ஆய்வு வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
– லோ. அபிநயா