கர்நாடகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் 29-ந்தேதி மறுவாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று(26-ந்தேதி) நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட வாக்குப்பதிவு வரும் மே 7-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நேற்று கர்நாடகாவின் சம்ராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட ஹானூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவின்போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது.

முன்னதாக அங்குள்ள இண்டிகானத்தா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். பின்னர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆனால் அங்குள்ள மற்றொரு தரப்பினர் வாக்கு செலுத்த மறுப்பு தெரிவித்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாக்குச்சாவடியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடைந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சம்ராஜ்நகர் தொகுதி தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், இண்டிகானத்தா கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் கடந்த 26-ந்தேதி(நேற்று) நடைபெற்ற வாக்குப்பதிவு ரத்து செய்யப்படுவதாகவும், அங்கு வரும் 29-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.