“செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்தும், விசாரிக்காதது ஏன்?" – ED-யிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கித்தருவது தொடர்பாக லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, அமலாக்கத்துறை அவர்மீது நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். அப்போது, “சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, சட்டவிரோத பணப் பரிமாற்றங்களால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால், ஐ.நா-வுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை.

குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்கத்துறையின் கடமையை மறுப்பதாகும். ஆதாரங்களைச் சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணைதான். ஏனென்றால், உரிய காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு. அதனால், 2005-ம் ஆண்டு முதல் இதுவரை, இந்தச் சட்டத்தின்கீழ் 330 பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையின் புலன் விசாரணையால், வங்கி மோசடி வழக்குகளில், ரூ.19,000 கோடி பணத்தை மீட்டு வங்கிகளுக்குத் திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன்பு சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம்தானே தவிர, அந்த ஆதாரங்களின் மூலம் வழக்கில் முடிவு காண இயலாது என்பதால், புலன் விசாரணையும், கைதுசெய்யப்பட்டவரைக் காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது.

கைதுக்குப் பிறகும், புகார் தாக்கலுக்குப் பிறகும், புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னரும், மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் விதிக்கப்படும். கைதுசெய்யப்பட்டவர்களுக்கு இந்தச் சட்டத்தின்கீழ் ஜாமீன் வழங்க முடியாது. அவர்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறைக்கு காவல்துறைக்கான அதிகாரம் இல்லை என்றாலும், அந்தத் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்வதைத் தடுக்க முடியாது. ஆனால், சுங்க வரிச் சட்டம் உள்ளிட்ட இன்ன பிற சட்டங்களின்கீழ் ஓராண்டு முதல் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. கைதுசெய்த அதிகாரிகளே ஜாமீனில் விடுதலை செய்யக்கூடிய குற்றங்களும் இருப்பதால், அந்தச் சட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை. கைது நடவடிக்கை சரியானதுதானா என்பதை அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. `நீதிமன்றக் காவலில் இருக்கிறார் என்றபோது, எப்படி ஜாமீன் வழங்க முடியும்?’ எனக் கூறி, நீதிபதி ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்தே செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.

செந்தில் பாலாஜி, ஸ்டாலின்

மேலும், தொடர்ந்து அவர் நீதிமன்றக் காவலில் நீடிக்க வேண்டும் என்பதும் உயர் நீதிமன்ற உத்தரவு. அதன் காரணமாக அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கக் கோர முடியாது என்பதல்ல… அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய எந்தத் தடையும் விதிக்கவில்லை. அப்படி, காவல் கோரியது நீதிமன்ற உத்தரவை மீறியதுமல்ல” எனக் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?’’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால், யார் பொறுப்பேற்க முடியும்…. அதனால் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம்.

தூஷர் மேத்தா

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலிலுள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அதேபோல, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியதிலிருந்து நீதிமன்றக் காவலில் இருப்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி கைதின்போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக நீதிபதி பரத சக்கரவர்த்திகூட கூறியிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட நாள் முதல் 15 நாள்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால், அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் எனக் கோர முடியும். மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பை ஏற்றுக்கொண்டால், எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் போதுமானது. பொதுவாக, அனைவரது இதயத்திலும் 40 சதவிகித அடைப்பு இருக்கும்” எனக் கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

மேகலா தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கின் விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.