மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; இங்கிலாந்து வீராங்கனைகள் ஆதிக்கம்..!!

துபாய்,

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் ஒருநாள் தொடர் மற்றும் இந்தியா- வங்கதேசம் இடையிலான ஒருநாள் தொடர் முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் வீராங்கனைகளின் ஒருநாள் தரவரிசைக்கான புதிய பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து வீராங்கனை நேட் ஸ்கிவர் பிரண்ட் ஒரே நேரத்தில் பேட்டிங் மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் சதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த முறை வெளியிட்ட தரவரிசையில் அவர் இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.

கடந்த ஒரு வார காலமாக பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். நேட் ஸ்கிவர் பிரண்ட் 803 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்திய வங்கதேச வீராங்கனை பர்கானா 19-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதன் மூலம் ஒருநாள் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் வந்த முதல் வங்கதேச வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மந்தனா 6-வது இடத்திலும் ஹர்மன்ப்ரீத் கவுர் 8-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் புள்ளிகள் கூடுதலாக பெற்று இங்கிலாந்து வீராங்கனைகள் சோபி எக்லெஸ்டோன் மற்றும் நேட் ஸ்கிவர் பிரண்ட் முதலிடத்தில் மாற்றமின்றி தொடருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.