கீவ்,
உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செர்னிஹிவ் நகரில் ரஷிய படைகள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தின. அந்த நகரில் உள்ள ஒரு தியேட்டர், பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர். சுமார் 100 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதனிடையே போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக நேற்று சுவீடன் நாட்டுக்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, செர்னிஹிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.