நியூயார்க்கில் 41வது இந்திய நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற சமந்தா

நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் நடிகை சமந்தா இணைந்து நடித்துள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக கலந்து கொண்டு வந்த சமந்தா திடீரென இரண்டு தினங்களுக்கு முன்பு நியூயார்க்கிற்கு கிளம்பி சென்றார். இது என்ன திடீர் பயணம் என ரசிகர்கள் பலரும் குழம்பிய நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற 41வது இந்திய நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகத்தான் அவர் கிளம்பி சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

அங்கு நடைபெற்ற 'இந்தியா டே பரேட்' நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்டார் சமந்தா. அவருக்கு நியூயார்க் வாழ் இந்தியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரணியில் கொழுத்தும் வெயிலில் இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தியபடி நடந்து சென்றார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் இதில் பங்கேற்றார்.

கூட்டத்தினரிடையே சமந்தா பேசும்போது “இன்று இங்கு இருப்பது உண்மையாக மிகப்பெரிய கவுரவம். இந்திய கலாசாரம், இந்திய பாரம்பரியம் எவ்வளவு சிறந்தது என்பதை நீங்கள் எனக்கு புரியும்படி செய்தீர்கள். இன்று நான் பார்த்த இந்த கணங்கள் என் மனதில் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நின்றுவிடும். இந்த அரிய கவுரவம் எனக்கு கிடைக்கும்படி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி. என் ஒவ்வொரு படத்தையும் ஆதரிக்கும் அமெரிக்க மக்களுக்கு நன்றி'' என்றார்.

கடந்தாண்டு நடிகர் அல்லு அர்ஜூன் இதேபோல இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.