ராணா – சோனம் கபூர் சர்ச்சை ; துல்கர் சல்மான் விளக்கம்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங் ஆப் கோதா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களுக்கு சென்று இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார் துல்கர் சல்மான். அப்படி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் ராணா, நானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது துல்கர் சல்மானின் பொறுமையான குணத்தை புகழ்ந்து பேசும் விதமாக ஒரு படப்பிடிப்பில் நடந்த நிகழ்வு பற்றி ராணா குறிப்பிடும்போது, அதில் நடிகை சோனம் கபூரை, தன்னை அறியாமலேயே பெயர் குறிப்பிடாமல் விமர்சித்து பேசி விட்டார். ஆனால் அவர் குறிப்பிட்டது சோனம் கபூரை தான் என்று வெளியில் செய்திகள் பரவ ஆரம்பித்ததும், நான் அப்படி பேசவில்லை இருந்தாலும் சோனம் கபூரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். அவர் அப்படி பேசியதற்கு சோனம் கபூரும் பதிலுக்கு சோசியல் மீடியாவில் சற்று காட்டமாக அதே சமயம் மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஜூம் மீட்டிங்கில் பேசிய துல்கர் சல்மானிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான், “அது அவருடைய பேச்சு.. அதனால் அதற்குள் நான் உள்ளே செல்ல விரும்பவில்லை. நான் ஒவ்வொரு விஷயத்தையும் மனதிற்குள் பாதுகாத்து வைக்க நினைப்பவன். அது மட்டுமல்ல எனக்கு அற்புதமான பல நண்பர்கள் குழுக்கள் இருக்கின்றன. மற்றும் திரையுலகிலும் சக நடிகர்களுடன் நட்பு பாராட்டி வருகிறேன்.

நான் எப்போதுமே எதையும் ஈசியாக எடுத்துக் கொள்பவன்.. யாரைப் பற்றியும் புகார் சொல்ல மாட்டேன்.. ஒருவேளை ராணா என்ன சொல்ல நினைத்தாரோ அதை முழுமையாக சொல்லாமல் விட்டு விட்டார் என்று தான் நினைக்கிறேன். அதனால்தான் அவர் வருத்தமும் தெரிவித்தார். அவர் எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவர் பேசியது வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என நினைத்து அவ்வாறு வருத்தம் தெரிவித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.