ஆட்சியை களைக்க முடிவு – அமலுக்கு வருமா குடியரசுத் தலைவர் ஆட்சி? என்ன செய்யப் போகிறார் பஞ்சாப் முதல்வர்!

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரைக் கொண்டு மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக நாடு முழுவதிலுமிருந்தும் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

மாநில அரசின் முடிவுகளுக்கு செவி கொடுக்காதது, சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது என தங்களால் எந்தெந்த இடங்கள் வரைக்கும் சென்று நெருக்கடி கொடுக்க முடியுமோ அங்கு வரை சென்று குடைச்சல் கொடுத்து வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப், கேரளா என பல மாநிலங்களை உதாரணமாக சொல்ல முடியும்.

மக்களவைத் தேர்தல் 2024 கருத்துக் கணிப்பு: ஆட்சியைப் பிடிப்பது யார்? மோடியை வீழ்த்துமா இந்தியா கூட்டணி?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வருகிறார். சனாதன கருத்துக்களை தூக்கிப் பிடிக்கும் வகையில் பேசி வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்திலும் இதே நிலை தான் நீடிக்கிறது. அங்கு முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் அங்கு ஆளுநராக இருக்கிறார். அங்குமே மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மசோதாக்கள் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை கேட்டு பஞ்சாப் அரசுக்கு ஆளுநர் கடிதங்கள் எழுதி வந்துள்ளார். இந்த கடிதங்களுக்கு மாநில அரசிடம் இருந்து பதில்கள் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டம் ஒழுங்கு தொடர்பாக தான் அனுப்பிய கடிதங்களுக்கு முதலமைச்சர் பகவந்த் மான் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் தொடர்ந்து அவர் தனது கடிதங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளார்.

பசுவந்த் மானுக்கு எழுதிய கடிதத்தில்,“அரசியல்சாசன நடைமுறையை பின்பற்றுவதில் தோல்வி அடைந்ததாக கூறி, 356வது பிரிவின் கீழ் இந்திய குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்புவது மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 இன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து முடிவெடுப்பது குறித்து இறுதி முடிவை எடுப்பதற்கு முன், எனது கடிதததிற்கு பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று காட்டமாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். ஆளுநரின் இந்த அணுகுமுறை நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.