விஜயலட்சுமி அளித்த புகார்.. விசாரணையை தொடங்கிய போலீஸ் – சிக்கலில் சீமான்?

சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக போலீசார் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். தமிழில் வெளியான தம்பி, வாழ்த்துகள் உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். அதில், வாழ்த்துகள் படத்தில் நடித்த விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார்.

அதில், ஈழத் தமிழரான என்னை திருமணம் செய்துகொள்வதாக சீமான் வாக்குறுதி அளித்தார். மதுரையில் திருமணம் செய்துகொண்டு வேளச்சேரி வீட்டில் கணவன் – மனைவி போல ஒன்றாக வாழ்ந்தோம். திருமணமானது இப்போது தெரிய வேண்டாம், பிரபாகரன் தலைமையில் ஊரறிய திருமணம் செய்துகொள்ளலாம் என நம்பிக்கை அளித்தார். ஏழு முறை எனக்கு கருக்கலைப்பும் நடந்தது. என்னிடம் இருந்து ரூ.60 லட்சம் பணம் மற்றும் 35 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துக்கொண்டு கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். என் வாழ்வை சீரழித்த சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி வலியுறுத்தி இருந்தார்.

எனினும் இந்த விவகாரத்தை அமைதியாக கடந்து செல்ல விரும்புவதாக சீமான் தெரிவித்துவிட்டார். விஜயலட்சுமி புகாரில் உண்மை இல்லை என்பதால்தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், எனக்கு கோடிக்கணக்கான தமிழர்கள் உள்ளனர். மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் இதைப் பற்றி பேசுவது கேவலமாக உள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால், சீமான் மீது தொடர்ச்சியாக விஜயலட்சுமி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர். சென்னை ராயலா நகர் காவல் நிலையத்திற்கு விஜயலட்சுமியை வரவழைத்த கோயம்பேடு துணை ஆணையர் உமையாள், என்ன நடந்தது என்பது தொடர்பாக விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணையின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரம் சீமானுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு சீமானுக்கு சிக்கலாக மாறுமா என்பது விசாரணை முடிவில் தெரியவரும். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினரோ, தொடர்ச்சியாக அரசியல் களத்தில் இயங்கி தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் சீமானின் குரலை ஒடுக்குவதற்கான முயற்சியே இந்த புகார், அனைத்தையும் சீமான் சட்டப்படி எதிர்கொள்வார்கள் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.