வங்கிக் கடனில் பர்னிச்சர், நகை வாங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் – மோசடி வழக்கில் கைது

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கி ரூ.848.86 கோடி கடன் வழங்கி உள்ளது. இதில், ரூ.538.62 கோடியை அந்நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என கனரா வங்கி குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சிபிஐ கடந்த மே 3-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ மே 5-ம் தேதி சோதனை நடத்தியது.

இதையடுத்து, அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நரேஷ் கோயல் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நரேஷ் கோயலை மும்பையில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் (சட்டவிரோதபணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம்) ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் கூறும்போது, “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடனில் நரேஷ் கோயலும் அவரது மனைவி அனிதாவும் ரூ.9.46 கோடிக்கு பர்னிச்சர் மற்றும் நகைகளை வாங்கி உள்ளனர். எனவே, அவரிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் 14 நாள் அமலாக்கத் துறை காவல் வழங்க அனுமதி அளிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

இதையடுத்து வரும் 11-ம் தேதி வரை நரேஷ் கோயலை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் அனுமதி வழங்கியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.