சிவமொக்காவில் அனுமதி இன்றி கணினி மையங்களில் ரெயில் டிக்கெட் விற்ற 3 பேர் கைது

சிவமொக்கா-

சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா தாளகொப்பா நகரில் உள்ள கணினி மையங்களில் அனுமதி இன்றி ரெயில் டிக்கெட் விற்பனை செய்வதாக சிவமொக்கா ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ரெயில்வே போலீசார் தாளகொப்பா நகருக்கு சென்று சோதனை செய்தனர். 3 கணினி மையங்களில் அனுமதி இன்றி ரெயில் டிக்கெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கணினி மையங்களின் உரிமையாளர்களான கணேஷ் (வயது 31), ரேவண்ணா (36), பிரசாந்த் (46) ஆகிய 3 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகள், கணினிகள், பிரிண்டர், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ரெயில் டிக்கெட் வழங்குவதற்கு கணினி மையங்கள் ரெயில்வே நிர்வாகத்தினர் அனுமதி பெற வேண்டும். ஆனால் கைதான 3 பேரும் அனுமதி பெறாமல் டிக்கெட் விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் ரெயில்வேயிக்கு செலுத்த கூடிய தொகையை செலுத்தாமல், கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சிவமொக்கா ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.