மாரிமுத்து திடீர் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல் – மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒலித்த குரல்!

அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முதல் மாலை வரை அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மாரிமுத்துவின் மரணம் குறித்து முதலவர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் திரு. மாரிமுத்து அவர்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாரிமுத்துவின் மரணம் ரசிகர்களுக்கு கடும் அவதி.!

ஓ.பன்னீர் செல்வம்

திரைப்பட இயக்குநரும், திரைப்பட நடிகரும், வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவரும், எதிர்நீச்சல் தொடர்மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தவருமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மாரிமுத்து அவர்கள் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். திரு. மாரிமுத்து அவர்களின் இழப்பு திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமாவளவன்

மாரடைப்பால் காலமானார் இயக்குநர் மாரிமுத்து என்பதையறிந்து மிகுந்த வேதனைப்படுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு விசிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த்

பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.