புதுடெல்லி: இஸ்கான் அமைப்பு தங்கள் கோசாலைகளில் உள்ள பசு மாடுகளை கறிக்கடைக்காரர்களுக்கு அதிக அளவில் விற்பதாக பாஜக எம்பியும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாட்டின் மிகப் பெரிய ஏமாற்று நிறுவனமாக இஸ்கான் உள்ளது. பசு மாடுகளை வளர்க்கும் கோசாலைகளை நடத்துவதன் மூலம் இந்த அமைப்பு, பரந்த நிலங்கள் உட்பட அரசாங்கத்திடமிருந்து பல்வேறு பலன்களைப் பெறுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் உள்ள இஸ்கானின் கோசாலைக்கு நான் சென்றிருந்தேன். ஆனால், பால் தராத பசு மாடு ஒன்றுகூட அங்கு இல்லை. அதேபோல், ஒரு கன்றுக்குட்டிகூட இல்லை. அனைத்தையும் அவர்கள் விற்றுவிட்டார்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம். இஸ்கான் தனது மாடுகளையெல்லாம் கறிக் கடைக்காரர்களுக்கு விற்கிறது. அவர்கள் செய்யும் அளவுக்கு வேறு யாரும் இவ்வாறு செய்வதில்லை.
இஸ்கான் அமைப்பினர், சாலைகளில் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று பாடிக்கொண்டே செல்கிறார்கள். அதோடு, தங்கள் வாழ்நாள் முழுவதும் பாலை நம்பியிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்த அளவுக்கு கால்நடைகளை கசாப்புக் கடைக்காரர்களுக்கு யாரும் விற்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்கான் அமைப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தேசிய தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்கான் அமைப்பின் கோசாலைகள் தொடர்பாக மேனகா காந்தி வெளியிட்ட வீடியோ குறித்த தகவல் கிடைத்தது. பசு பாதுகாப்பில் இஸ்கான் ஒரு முன்னோடி அமைப்பு. உலகின் பல பகுதிகளிலும் மாட்டிறைச்சி வழக்கமான உணவாக உள்ள நிலையில், மாடுகளை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பாக இஸ்கான் திகழ்கிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட கோசாலைகளை இஸ்கான் நிர்வகித்து வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான புனித பசுக்களும் எருதுகளும் தனிப்பட்ட அக்கறையுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மாடுகளின் வாழ்நாள் முழுவதும் இத்தகைய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
கைவிடப்பட்ட மாடுகள், காயமடைந்த மாடுகள், அடிமாடுகள் ஆகியவை இஸ்கானின் கோசாலைகளில் பாதுகாக்கப்படுகின்றன. சமீப காலமாக பசு பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை விவசாயிகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இஸ்கான் வழங்கி வருகிறது. பசுக்களின் புனித தன்மையை உணர்ந்து, அவற்றை வழிபடும் நமது கலாச்சாரத்திற்கு புத்துயிரூட்டும் பணிகளை இஸ்கான் மேற்கொள்கிறது. மாடுகள் மிகுந்த அக்கறையுடன் பராமரிக்கப்படுவதற்காக அரசின் பாராட்டுக்களை இஸ்கான் பெற்றுள்ளது.
விலங்குகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட பிரபலமான நபர் மேனகா காந்தி. இஸ்கான் அமைப்பின் நலம் விரும்பியும்கூட. அவரது அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்கானின் கோசாலைகளில் மாடுகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பது தொடர்பான ஆவணங்களை நாங்கள் இங்கே பதிவிடுகிறோம். உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள அவை உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.