உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கு முன் இசை நிகழ்ச்சிகள்…பிசிசிஐ அறிவிப்பு…!

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் நாளை நடைபெற உள்ள 12-வது லீக் ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தை சிறப்பிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இசை நிகழ்ச்சி இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற உள்ளது. இதனை பிசிசிஐ தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான அரிஜித் சிங், சங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.