லண்டன்: பிரிட்டனில் பல நகரங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடந்தது. இதில், கலந்து கொண்டவர்கள் ‛ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், ‛ ‛ஜிகாத்’க்கு அழைப்பு விடுப்பது என்பது யூதர்களுக்கு மட்டும் அச்சுறுத்தல் அல்ல. பிரிட்டனின் ஜனநாயக மாண்புகளுக்கும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது’, எனக்கூறியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டனின் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் பேரணி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்கள் ‘ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இது குறித்த வீடியோ அந்நாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியதாவது: வார இறுதியில் பிரிட்டன் நகர வீதிகளில் வெறுப்புணர்வை பார்க்க முடிந்தது. ‛ஜிகாத்’க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது யூதர்களுக்கு மட்டும் ஏற்பட்ட அச்சுறுத்தல் அல்ல. பிரிட்டனின் ஜனநாயக மாண்புகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் ஆகும்.
நமது நாட்டில் யூதர்களுக்கு எதிரான மிரட்டலை சகித்துக் கொள்ள முடியாது. பிரிவினைவாதம் தலைதூக்காமல் இருக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
போலீஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த பேரணியின் போது சீர்குலைவு மற்றும் சில வெறுக்கத்தக்க பேச்சுகள் இருந்தன. 5 போலீசார் லேசான காயமடைந்தனர். பேரணியில் ‛ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வீடியோக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement