புதுடில்லி, மத்திய ஆயுத போலீஸ் படைகளில், போதை பொருள் மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் பணியில், இந்திய இன நாய்களும் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, சசாஸ்திர சீமா பால், தேசிய பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை மத்திய ஆயுத போலீஸ் படையில் இடம் பெற்று உள்ளன.
இந்த படை பிரிவுகளில் 4,000த்துக்கும் அதிகமான நாய்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 300க்கும் அதிகமான நாய் குட்டிகளை வாங்கி அவற்றுக்கு பயிற்சி அளித்துவருகின்றனர்.
இங்கு ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார், பெல்ஜியன் மாலினோய்ஸ், காக்கர் ஸ்பானியல் போன்ற வெளிநாட்டு வகை நாய்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், பாதுகாப்பு பணிக்கு இந்திய இன நாய்களையும் பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, ராம்பூர் ஹவுண்ட் வகை நாய்களுக்கு, மத்திய ரிசவ்ட் போலீஸ் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இமயமலை பகுதியை சேர்ந்த ஹிமாச்சலி ஷெப்பர்ட், காடி, பக்ரவால், திபெட்டன் மஸ்டிப் போன்ற நாய் வகைகளுக்கும் பயிற்சி அளிக்க துவங்கிஉள்ளனர்.
இந்த வகை நாய்கள், பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடிக்கவும், வெடி பொருட்கள், கன்னி வெடிகள், போதை பொருட்கள், கள்ள ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவைகளை மோப்பம் பிடித்துஅடையாளம் காணவும் பயன்படுத்தப்படுகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்