கேரள குண்டுவெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்திய நபர் போலீசில் சரண்: காவல்துறை ஏடிஜிபி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று டொமினிக் மார்டின் என்பவர் சரண் அடைந்துள்ள நிலையில், போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டறிந்தார். மேலும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாாரக இருப்பதாக உறுதி அளித்தார். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து திங்கள்கிழமை அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், கேரள மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “களமசேரி குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று திரிசூரில் உள்ள கொடகரா காவல் நிலையத்தில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். அவரது பெயர் டொமினிக் மார்டின். குண்டுவெடிப்பு நிகழ்ந்த மதவழிபாட்டுத் தலத்தின் சபையை சேர்ந்தவர்தான் நான் என்று சரண் அடைந்துள்ள டொமினிக் மார்டின் கூறியுள்ளார். அதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

மேலும், இந்தச் சம்பவத்தில் காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு மத வழிபாட்டுத் தலத்தின் மையப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். கிட்டத்தட்ட 45 பேர் காயமடைந்துள்ளனர். 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஏற்பட்ட தீ காயங்களால்தான் பெண் பலியாகி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் சேர்ந்து காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “இந்த சம்பவத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 18 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 12 வயது சிறுவன் ஒருவனுக்கு 95% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவருக்கு 90% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேரின் உடல் நிலை நன்றாக உள்ளது. அவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.