கேரள மாநிலம், கொச்சின், களமசேரியில் சாம்றா இன்டர்நேஷனல் கிறிஸ்தவ கன்வென்சன் சென்டரில் யாக்கோபா சாட்சிகள் சபைகளின் மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கி நடந்த நிலையில், நிறைவுவிழா இன்று நடந்தது. சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். காலை சுமார் 9:40 மணியளவில் அடுத்தடுத்து மூன்று பகுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளன. வெடித்த பகுதிகளில் தீ மளமளவென எரிந்தது. அதில் ஒரு பெண் மரணமடைந்துள்ளார். 36 பேர் காயம் அடைந்துள்ளனர். டிஃபன் பாக்ஸில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததாகவும், கன்வென்சன் ஹாலில் டிஃபன் பாக்ஸ் குண்டு வெடிப்பதற்கு சற்று முன்பு நீல நிற கார் ஒன்று வேகமாக வெளியே சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. போலீஸார் சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து, நீல நிற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கேரள டி.ஜி.பி ஷேக் தர்வேஸ் சாகிப் கூறுகையில், “களமசேரியில் இம்புரூவைஸ்ட் எக்ஸ்புளோஸிவ் டிவைஸ் (ஐ.இ.டி) பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள தனி டீம் ஏற்படுத்தப்படும். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பக் கூடாது. வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனரா என்பது பற்றி இப்போது கூறமுடியாது. விசாரணைக்கு பின்பே அதுபற்றி கூற முடியும். மத்திய இன்டெலிஜென்ஸ், உள்துறை-யில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. குற்றம் செய்தவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த நிலையில், `குண்டு வெடிப்பில் ஈடுபட்டது, நான்தான்’ எனக் கூறிக்கொண்டு, திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளதாக தகவல் வெகியாகி உள்ளது. கொச்சியைச் சேர்ந்தவன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த நபர் சரணடைந்ததாக கூறப்படுகிறது.