இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்… இந்திய அணியின் சிறந்த பீல்டராக ராகுல் தேர்வு…!

லக்னோ,

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீரருக்கான விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் கொடுத்த கேட்ச்சை கே.எல்.ராகுல் அபாரமாக பிடித்தார். அதனால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் தங்கப்பதக்கத்தை கே.எல்.ராகுலுக்கு அளித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.