என்னைவிட சிறந்த பௌலர் இந்த இந்திய வீரர்தான்… பாகிஸ்தான் வேகப்புயல் வாசிம் அக்ரம் புகழாரம்!

Indian Cricket Team: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்று போட்டிகள் தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து அணிகளும் 6 போட்டிகளில் விளையாடிவிட்டன. இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் தற்போது தங்களின் 6ஆவது லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. எனவே அனைத்து அணிகளுக்கும் இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே உள்ளன. 

தற்போது அனைத்து அணிகளையும் விட இந்திய அணி (Team India) சிறப்பான நிலையில் உள்ளது எனலாம். 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வென்று முதலிடத்தில் உள்ளது, இந்திய அணி. அதன்பின், தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. இருப்பினும் அந்த அணியும் நெதர்லாந்து உடன் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணியும் தலா 2 தோல்விகளை சந்தித்து அரையிறுதிக்கு முன்னேற மும்முரம் காட்டி வருகின்றன. பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு வர முயற்சித்து வரும் சூழலில், வங்கதேசம், இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. 

இது ஒருபுறம் இருக்க இந்தியாவுக்கு தான் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் இந்த கட்டத்தில் தங்களின் கணிப்பை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான ஷமி (Shami), பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு பலரையும் கவர்ந்துள்ளது எனலாம். பேட்டிங்கிலும் சிறந்த விளங்கும் இந்தியா தற்போது உலகத்தர பந்துவீச்சை கொண்டுள்ள அணியாக உள்ளது.

அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன், இடதுகை வேகப்பந்துவீச்சாளருமான வாசிம் அக்ரம் (Wasim Akram) இந்திய அணி வீரர்கள் ஷமி, பும்ரா ஆகியோரை புகழ்ந்துள்ளார். குறிப்பாக பும்ரா குறித்து அவர் பேசியதாவது,”வலது புறத்தில் இருந்து பந்தை கொண்டு வரும் போது, பந்து ஸ்டம்பிற்கு உள்ளே வருகிறது. எனவே, பேட்ஸ்மேன் பந்து வரும் கோணத்தில் பேட்டை கொண்டுசென்று விளையாடுவார். 

உள்ளே இருந்து பந்து வெளியே வரும்போது, பேட்ஸ்மேன் அதனை அடிப்பதில் சிரமம் ஏற்படும். நான் வலது கை பேட்டரை அவுட்-ஸ்விங் செய்யும்போது, பந்தை இப்படிப் பிடித்து (இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்) மணிக்கட்டின் மூலம் பந்துவீசுவேன். எனவே, பந்து உள்ளே வந்து வெளியே செல்லும். ஆனால், பும்ரா (Jasprit Bumrah) நிச்சயமாக என்னை விட புதிய பந்தில் சிறந்த கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளார் என்பேன்” என்றார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்து 230 ரன்களை இலக்காக நிர்ணியித்த இந்திய அணிக்கு, பும்ரா, ஷமி ஆகியோர் வெற்றியை வசப்படுத்தினர். ஷமி 7 ஓவர்களில் 2 ஓவர்களை மெய்டனாக வீசி 22 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா 6.5 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.