சுப்மான் கில்லுக்கு மீண்டும் ஓய்வு? ஓப்பனிங்கில் அதிரடி வீரர்… அசூர பலம் பெறும் இந்தியா

India National Cricket Team: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) அந்த அணி சார்பில் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்தவராக உள்ளார். ஓப்பனிங்கில் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது எனலாம். அவர் ஆரம்பத்தில் செட் செய்து கொடுக்கும் ஸ்கோரை விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் இலக்கு வரை எடுத்துச் சென்று வெற்றியை பெற்றுத் தருகின்றனர். இதனாலேயே, முதல் 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இந்தியா இந்த தொடரில் முதல்முறையாக முதல் பேட்டிங் செய்தது. அதில் இந்திய அணியின் (Team India) டாப் ஆர்டர் சரிந்த நிலையில், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் இணைந்து ஓப்பனரான ரோஹித் சர்மா நிதானமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்தியாவுக்கு நல்ல ஸ்கோரை எட்ட வழிவகுத்து கொடுத்தார். தொடக்க ஆட்டங்களில் இருந்த அதிரடி அந்த போட்டியிலும் தொடர்ந்தது. ஆனால், ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய இவர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார்.

ரோஹித் சர்மாவின் இந்த அதிரடி மற்றும் நிதானம் இரண்டும்தான் இந்திய அணிக்கு பெரும் பலமாக உள்ளது. அவர் 6 போட்டிகளில் விளையாடி 1 சதம், 2 அரைசதத்துடன் 398 ரன்களை (Rohit Sharma Runs) குவித்துள்ளார். முதல் போட்டியில் டக் அவுட்டாகியிருந்தார். மேலும், மற்ற இரண்டு போட்டிகளிலும் கூட அவர் 40+ ரன்களை எடுத்திருக்கிறார். ரோஹித் குறித்து இவ்வளவு கூறுவதற்கு காரணம், அவரின் சக ஓப்பனர் கில்லின் சொதப்பலை குறிப்பிடவே. 

உலகக் கோப்பை தொடருக்கு முன் யாரிடமாவது சுப்மான் கில்லை (Shubman Gill) விட ரோஹித் அதிக ரன்கள் அடிப்பார் என கூறியிருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். கில்தான் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்களை அடிக்கப்போகிறார் என்று பல மூத்த வீரர்கள் கணித்தனர். ஆனால், அது அப்படியே தலைகீழ் ஆகியுள்ளது. டி காக் 6 போட்டிகளில் 431 ரன்களுடன் நடப்பு தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார், ரோஹித் இதில் 398 ரன்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளார்.

சுப்மான் கில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் முதலிரண்டு போட்டிகளை தவறவிட்டார். அடுத்த நான்கு போட்டிகளில் 1 அரைசதத்துடன் அவர் 104 ரன்களை எடுத்துள்ளார். ரோஹித்தின் ரன்களுக்கும், சுப்மான் கில்லின் ரன்களுக்கும் உள்ள வித்தியாசம் பலருக்கும் மலைப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், ஓப்பனர் ஒருவர் இப்படி அதிரடியாய் விளையாடியே இந்தியா தொடர் வெற்றிகளை குவிக்கும்போது, மறுமுனையிலும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடும் வீரர் இருந்தால் உலகக் கோப்பையே நமக்குதான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சுப்மான் கில்லுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் ஓய்வளித்துவிட்டு இடதுகை வீரர் இஷான் கிஷனுக்கு (Ishan Kishan) வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல் எழுகின்றன. சுப்மான் கில் விளையாடாத முதலிரண்டு போட்டிகளில் இஷான் கிஷன்தான் விளையாடினார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டக்அவுட்டானாலும், ஆப்கன் போட்டியில் சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து, இடது – வலது காம்பினேஷன் என்பதால் அவருக்கு வாய்ப்பளித்தன் மூலம் இந்தியா இன்னும் வலிமையடையும். இருப்பினும், சுப்மான் கில் எப்போது வேண்டுமானாலும் அடிக்கக் கூடியவர், ஒரு போட்டியில் அவர் அடித்துவிட்டால் அவரின் ஃபார்ம் மீண்டும் திரும்பிவிடும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.