ராமர் கோவில் கட்டுவதை வேண்டுமென்றே காங்கிரஸ் கிடப்பில் போட்டது: அமித் ஷா குற்றச்சாட்டு

சண்டிகர்,

அரியானாவின் கர்னால் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

“நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோவில் கட்டும் திட்டத்தை காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. நாட்டு மக்கள் மோடியை இரண்டாவது முறையாகவும் பிரதமராக்கினார்கள். அவர், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கினார். தற்போது கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. பூமி பூஜையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சிலை பிரதிஷ்டையிலும் பங்கேற்க இருக்கிறார்.

அரியானா மக்கள் அனைவரும் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று ராமரை தரிசிக்க வேண்டும். மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் மனோகர் லால் கட்டா அரசும் உள்ளன. இந்த இரு அரசுகள் மீதும் யாரும் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். வளர்ச்சித் திட்டங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் கட்டார் செய்த பணிகளைப் பாருங்கள்” இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.