இந்தியா ஜெயித்தால் ரூ.100 கோடி தருகிறேன்… பிரபல ஜோதிட இணையதள சிஇஓ ஜாக்பாட் அறிவிப்பு!

India vs Australia, WCC Final 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் (IND vs AUS Final 2023) மோதும் இறுதிப்போட்டி இன்று மதியம் தொடங்க உள்ளது. போட்டி தொடங்கும் முன் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் அணியின் விமான சாகசம் நடைபெறுகிறது, மேலும் போட்டிகளுக்கு நடுவே பல்வேறு பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

அனல் பறக்கும் இறுதிப்போட்டியைக் (ICC World Cup Final) காண 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் திரள உள்ளனர். அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் மொபைல் (ஓடிடி) மூலம் போட்டியை நேரலையில் காண்பார்கள். அந்த வகையில், இந்த போட்டியில் நேரலையில் ஓடிடி வியூயர்ஷிப் (Viewership) புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப்போட்டியை நேரலையில் ஒரே நேரத்தில் 5.4 கோடி பேர் பார்த்தனர். 

போட்டி மீது இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Modi), உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன்கள் உள்ளிட்டோரும் இறுதிப்போட்டியை காண மைதானத்திற்கு வர அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் கபில் தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. பல்வேறு திரை நட்சத்திரங்கள், பிரபலங்களும் போட்டியை காண நேரில் வர வாய்ப்புள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, இறுதிப்போட்டி மீதான பல்வேறு கணிப்புகளும் அனல் பறந்து வருகின்றன. அந்த வகையில், ஜோதிட கணிப்புகளும் பலராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு AstroTalk என்ற ஜோதிடம் சார்ந்த தளம் அதன் பயனர்களுக்கு ஒரு உற்சாகமளிக்கும் தகவலை அளித்துள்ளது. அதாவது, உலகக் கோப்பையை வென்று இந்தியா சாம்பியனானால் ரூ.100 கோடி தருவதாக அதன் சிஇஓ புனித் குப்தா தெரிவித்துள்ளார். 

LinkedIn தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில்,”கடைசியாக 2011இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றது, அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும்.

சண்டிகரில் அருகில் உள்ள கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் எனது நண்பர்கள் அனைவருடனும் போட்டியைப் பார்த்தேன். நாங்கள் அனைவரும் நாள் முழுவதும் மிகவும் பதட்டமாக இருந்தோம். இரவு முழுவதும் போட்டி குறித்த வியூகத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததால், போட்டியின் முந்தைய நாள் நாங்கள் சரியாக தூங்கவில்லை.

சிஇஓ-வின் பதிவு

ஆனால் நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றவுடன், எனக்கு நீண்ட நேரம் உற்சாகத்தில் மிதந்தேன், புல்லரித்துப்போனது. நான் என் நண்பர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்துக் கொண்டாடினேன். நாங்கள் சண்டிகரில் பைக்கில் வலம் வந்து, ஒவ்வொரு ரவுண்டானாவிலும் தெரியாத நபர்களுடன் நடனம் ஆடினோம். சந்தித்த அனைவரையும் கட்டி அணைத்தோம்.

அது உண்மையிலேயே என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள். நேற்றிரவு (நவ. 17) இந்த நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். கடந்த முறை எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள சில நண்பர்கள் இருந்தனர், ஆனால் இந்த முறை எங்களிடம் பல AstroTalk பயனர்கள் உள்ளனர், அவர்கள் நண்பர்களைப் போலவே இருக்கிறார்கள், எனவே அவர்களுடன் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நான் ஏதாவது செய்ய வேண்டும்.

எனவே, இன்று (நவ. 18) காலை நான் எனது நிறுவனத்தின் நிதிக் குழுவிடம் பேசி, இந்தியா உலகக் கோப்பையை வென்றால் ரூ.100 கோடியை எங்கள் பயனர்களுக்கு அவர்களின் Wallet-இல் விநியோகிப்பதாக உறுதியளித்தேன். இந்திய அணிக்காக பிரார்த்திப்போம், ஆதரிப்போம், உற்சாகப்படுத்துவோம்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.