தொடர்மழை எதிரொலி | சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக, சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வரும் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (நவ.28) உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீர்மட்டம் உயர்வு: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் நவ.29-ம் தேதி மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழையை ஒட்டி, நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, கும்மிடிப்பூண்டியில் 5.6 செ.மீ, சோழவரத்தில் 5 செ.மீ, செங்குன்றம் பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால், ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று விநாடிக்கு 164 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது 532 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், 24 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.19 அடியாக உயர்ந்துள்ளது. முழுக் கொள்ளளவை எட்டி வரும் நிலையில், இப்பகுதியில் தொடர்மழை பெய்தால், ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல், 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.89 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 281 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னையின் குடிநீர் தேவைக்காக இதிலிருந்து 189 கனஅடி வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், 18.86 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 16.05 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 174 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல், 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் தற்போது 30.62 அடியாக உயர்ந்துள்ளது. விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஏரியிலிருந்து 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.