பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் வானொலி வாயிலாக பொதுமக்களோடு உரையாடி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர்களை பாராட்டிம் பேசி வருகிறார்.
அதன்படி, நேற்று ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான லோகநாதன் என்ற சமூக ஆர்வலரின் சேவை குறித்து மோடி பாரட்டி பேசினார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (59). இவர் கடந்த 22 ஆண்டுகளாக வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். கழிவறைகளை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை வைத்து கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறார்.
மேலும், பயன்படுத்தப்பட்ட உடைகளை பல்வேறு பகுதிகளில் சேகரித்து, ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். அவரது சேவையை அங்கீகரித்து பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து லோகநாதன் கூறுகையில், “வறுமை காரணமாக என்னால் படிக்க முடியவில்லை. எனவே, வெல்டிங் உள்ளிட்ட தினக்கூலி வேலைகளை செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்த மட்டுமே போதுமானதாக இருக்கும். வறுமையில் வாடும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பது என் கனவு.
அதற்காக கழிப்பறைகளை சுத்தம் செய்கிறேன். அதில் கிடைக்கும் பணத்தை சேமித்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளேன். ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் என் சேவையை குறிப்பிட்டு பேசியதை மிகப் பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். அவருக்கு மிகப்பெரிய நன்றி” என்றார்.
பிரதமரின் பாராட்டு இவருடைய சேவைக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். ஏழைகளுக்கு நல்லுள்ளத்துடன் உதவும் இவருக்குத் தேவையான உதவிகள் கிடைத்தால் நல்லதுதான்!