தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறித்தவ அமைப்பின் நிகழ்ச்சி கோவை கருமத்தம்பட்டி பகுதியில் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் மீது தாங்க முடியாத வரிச்சுமையை திணித்தார்கள்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள கோவையில் தொழில் நடத்துவதில் அதீத சிக்கல்கள் எழுந்தன. அந்த சமயத்தில் மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி உள்பட அனைத்து வரிகளையும் பல மடங்கு அதிகரித்தனர். மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிப்புக்குள்ளானது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாள் பச்சைத் துண்டைக் கட்டிக்கொண்டு, ‘நானும் விவசாயி தான், நானும் டெல்டாகாரன் தான்.’ என்றெல்லாம் வசனம் பேசினார். ஆனால் திருவண்ணாமலை செய்யூரில், நிலங்களை கையகப்படுத்தலுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கரிசனமின்றி கைது செய்தார். கொடுங்கோல் முதலமைச்சராக மாறிவிட்டார். இது திராவிட மாடல் ஆட்சியல்ல. சிறுபான்மை மக்களை ஏமாற்றும் தந்திர மாடல் ஆட்சி. கடந்த காலத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது.
பாஜக அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரை பாஜக கொள்கைகள் திமுகவுக்கு தெரியாதா? பதவி சுகம் வேண்டுமென கொள்கையை காற்றில் பறக்க விட்டார்கள். பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததை மக்கள் மறந்து விடுவார்கள் என பசுந்தோல் போர்த்திய புலியாக சிறுபான்மை மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதியில் எந்த நகரப்பேருந்துகளில் ஏறினாலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க முடியும் என கூறினர். தற்போது பிங்க் நிற பெயிண்ட் அடித்த பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும் என்கிறார்கள். நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் ஒரு விண்ணப்பதை பூர்த்தி செய்ய சொல்கிறார்கள்.
இது ஏழைகளுக்காக கொண்டு வந்த திட்டமா? சாதிக்காக கொண்டு வந்த திட்டமா? இதுதான் திராவிட மாடல். அதிமுகவில் மதம், சாதி எல்லாம் இல்லை. இங்கு ஆண் சாதி, பெண் சாதி ஆகிய இரண்டு சாதிகள் தான் உள்ளன.” என்றார்
முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, ‘சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன்’ என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி தன் உரையில் ஒரு குட்டி கதை மூலம் திமுக ஆட்சியை விமர்சித்தார். “ஒரு விவசாயியின் இரு மகன்கள் உள்ளனர். அதன்படி திறம்பட பணியாற்றுகிற நேர்மையான இளைய மகனும், தந்திரமாக ஏமாற்றி.. வேலை செய்யாமல் வஞ்சகம் செய்கிற மூத்த மகனும் இருக்கின்றனர்.
இளைய மகன் அறவழியில் வேலைகளை நேர்மையாகச் செய்கிறான். மூத்த மகனோ இளைய மகன் செய்த உழைப்பினை தன் உழைப்பாய் காட்டி ஏமாற்றுகிறான். இறுதியில் அவன் வீழ்கிறான். அதிமுக உழைத்து முன்னேறியது. ஆனால் திமுக அந்த உழைப்பின் மீது ஏறி சவாரி செய்கிறது.” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.