ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனுக்கு தமிழக காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி

சென்னை: ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார். 1935-ம் ஆண்டு பிறந்த ராஜேந்திரன் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். 1957-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகி உதவி ஆட்சியர், துணை ஆட்சியர்போன்ற பொறுப்புகளை வகித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரானார். அப்போது 1964-ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை திறம்பட எதிர்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தார். அந்த அனுபவம் மூலம் 1999 ஒடிசா ஆளுநராக இருந்தபோது வந்த புயலை திறம்பட எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றினார்.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலாளரான ராஜேந்திரன், 1989-ம் ஆண்டில் முதல்வராக கருணாநிதி வந்த பிறகும் அதே பதவியில் தொடர்ந்து பணியாற்றினார். யுனிசெப் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், நியூயார்க்கில் அதன் திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, எம்.எம்.ராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்.எம்.ராஜேந்திரனுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த ப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், தமிழக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியவரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவொய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

1957-ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகவும், ஒன்றிய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி, இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக செவ்வனே மக்கள் பணியாற்றியவர் எம்.எம். ராஜேந்திரன்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவரின் மறைவு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.எம். ராஜேந்திரன் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களால் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது சேவைகளைப் போற்றும் வகையில், காவல் துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.