“சசிகலா பாவம், ராஜமாதாவாக இருக்க வேண்டியர்; எடப்பாடியால் தான் இந்த நிலைமை!’ – சொல்கிறார் ஓ.பி.எஸ்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் பேசுகையில், “கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. கோட்டையை மீட்டெடுக்கவே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்காக உருவாக்கினார். தொண்டர்களின் உரிமையைக் காக்கும் இயக்கமாக இருக்க வேண்டும் என்று, பல்வேறு சட்ட விதிகளை அவருடைய காலத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்கான உரிமையை கட்டிக் காப்பாற்றினார். சாதாரண தொண்டரும் உயர் பதவிக்கு வர முடியும் என்பதை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கினர். சாதாரண தொண்டரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக வர முடியும் என்ற விதியை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சிலர் கபளீகரம் செய்து அபாய நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். சட்டவிதிகளை தூக்கி எறிந்துவிட்டு இன்றைக்கு மாற்றி உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்

இதனால், மிட்டா, மிராசுதாரர்களும், தங்கமணி, வேலுமணி போன்றவர்கள்தான் அ.தி.மு.க.-வில் பெரிய பதவிகளுக்கு வரமுடியும். இரும்பு இதயம் படைத்த நயவஞ்சகர்களால், நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். பொதுக்குழுவில் நான் என்ன தவறு செய்தேன் என பழனிசாமியால் பதில் சொல்ல முடியுமா? அவருக்கு தெம்பும், தைரியமும் உண்டா?

ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா இரண்டு முறையும், சசிகலா ஒரு முறையும் என்னை முதலமைச்சர் ஆக்கினார்கள். சசிகலா பாவம். இன்றைக்கு சின்ன குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்துகொண்டிருக்கிறார். ராஜமாதாவாக இருக்க வேண்டிய சசிகலா, இந்த நிலைமைக்கு ஆளாக்கிய நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிசாமி. அவர் தலைமையில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் தோல்வியைத்தான் அ.தி.மு.க. சந்தித்துள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் குணம் பழனிசாமிக்கு உண்டா? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக் கடனுடன் இருப்பேன். கழகத்தின் சட்டவிதியை எம்.ஜி.ஆர். கொண்டுவந்ததுபோல், சாதாரண தொண்டரும் பொதுச்செயலாளராக மாறுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கி உள்ளோம். உள்கட்டமைப்பு நமக்கு தேவைப்படுகிறது. கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்களை, இரண்டரை கோடி தொண்டர்களாக மாற்றுவோம்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால், அவர்களுக்கும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. மக்களுக்கும் பயன் கிடையாது. பத்து ஆண்டு காலம் இந்தியாவை வலிமையாக மாற்றியுள்ள பிரதமர் மோடிக்கு ஆதரவு தருவதுதான் எங்களின் நிலைப்பாடு.

கழகத்தின் சட்ட விதிகள் காற்றில் பறந்துள்ளன. ஜனவரி 19-ஆம் தேதி வரும் நீதிமன்றத் தீர்ப்பு முக்கியமானதாக இருக்கும். அதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு முடிவு வரும். மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான் முக்கியமானதாக கருதுகிறோம். நானும், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். பொதுவாழ்வில் இருக்கும் அமைச்சர் உதயநிதி பொறுப்பாக பேச வேண்டும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.