தமிழ்நாடு கைப்பந்து லீக்: விருதுநகர் அணி 2-வது வெற்றி

சென்னை,

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 6 அணிகள் இடையிலான முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்.) சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

இந்த போட்டி தொடரில் 6-வது நாளான நேற்று மாலை நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் விருதுநகர் கிங் மேக்கர்ஸ்-விழுப்புரம் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் விருதுநகர் கிங் மேக்கர்ஸ் 21-15, 18-21, 21-19, 21-19, 21-20 என்ற செட் கணக்கில் விழுப்புரம் சூப்பர் கிங்சை வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் ஆடிய விருதுநகர் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். இதுவரை ஆடியுள்ள 4 லீக்கிலும் தோல்வியை தழுவிய விழுப்புரம் அணி இறுதிசுற்று வாய்ப்பை இழந்தது.

மற்றொரு ஆட்டத்தில் கடலூர் வித் அஸ் அணி 21-20, 21-17, 21-17, 19-21, 21-10 என்ற செட் கணக்கில் கிருஷ்ணகிரி புல்சை சாய்த்து தொடர்ந்து 4-வது வெற்றியை ருசித்தது.

இன்று நடைபெறும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் சென்னை ராக்ஸ்டார்ஸ்-விருதுநகர் கிங் மேக்கர்ஸ் (மாலை 3.30 மணி), கிருஷ்ணகிரி புல்ஸ்-குமரி போனிக்ஸ் (மாலை 6 மணி), கடலூர் வித் அஸ்-விழுப்புரம் சூப்பர் கிங்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.