டெஸ்ட் அணியிலும் வாய்ப்பில்லை… இந்தியாவில் கட்டம் கட்டப்படும் நட்சத்திர வீரர்?

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடங்கும் வரை, அதாவது அடுத்த இரு மாதங்களுக்கு 5  டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணிக்கு எதிராக (IND vs ENG Test Series) விளையாட உள்ளது. வரும் ஜன. 14 (நாளை), ஜன. 17 ஆகிய தேதிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மீதம் உள்ள இரண்டு டி20 போட்டிகளை விளையாடிய பின்னர், ஜன. 25ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. 

இந்திய அணி (Team India) இந்த டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்ற கடுமையாக போராடும். அதேபோல், இங்கிலாந்து அணியும் இந்தியச் சூழலுக்கு பழகும் விதமாக தனது பயிற்சியை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி உள்ளது. ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி விரைவில் இந்தியா வர உள்ளது. 

இந்திய அணி அறிவிப்பு

ஏற்கெனவே, இங்கிலாந்து 16 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தவிட்ட நிலையில், இந்தியா 16 வீரர்கள் கொண்ட அணியை நேற்று அறிவித்தது. பிசிசிஐ அறிவித்த இந்த அணிக்கு வழக்கம்போல் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய அதே வீரர்கள்தான் பெரும்பாலும் இந்த அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த அணி முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். 

புஜாரா, ரஹானே ஆகியோருக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் டெஸ்டில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பை தற்போது பெறவில்லை. ஷர்துல் தாக்கூரும் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். ஷமிக்கு காயம் காரணமாக முதலிரு போட்டிகளில் விளையாடவில்லை. டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் போராடி வந்த அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இதில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய டெஸ்ட் அணிக்கு ரிஷப் பண்ட் காயத்திற்கு பின் தேவைப்பட்ட அந்த விக்கெட் கீப்பர் பஞ்சத்திற்கு தீர்வு காணும் வகையில் துருவ் ஜுரலுக்கு (Dhuruv Jurel) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். இதுவரை 15 முதல்தர போட்டிகளில் விளையாடி 46.47 சராசரியில் சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் 790 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த மாதம், தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் ஜுரல் விக்கெட் கீப்பிங் செய்தது குறிப்பிடத்தக்கது. 

இஷான் கிஷன் எதிர்காலம்…?

கேஎல் ராகுல், கேஎஸ் பரத் போன்ற விக்கெட் கீப்பர்கள் இருவர் ஸ்குவாடில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இஷான் கிஷன் தற்காலிகமாக ஓய்வில் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜுரல் பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இஷான் கிஷனுக்கு (Ishan Kishan) இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம்தான். 

ஒருவேளை ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்பினால், இஷான் கிஷன் மற்ற பார்மட்டில் விளையாடுவதும் கேள்விக்குறியாகும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் ஒழிய டி20 உலகக் கோப்பை தொடருக்கும் அவர் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. டி20இல் ஜித்தேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் போட்டிக்கு இருக்க, ஓடிஐ அணியிலும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு மங்கியே இருப்பது குறிப்பிடத்தக்கது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.