மனசு விட்டு போன ஷ்ரேயாஸ்? இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து வெளிப்படை!

India National Cricket Team: இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் (IND vs AFG T20 Series) விளையாடி வருகிறது. கடந்த அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஓடிஐ உலகக் கோப்பை தொடருக்கு பின் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடியது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடிய இந்தியா, பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றை விளையாடினர். 

முழு கவனத்துடன் இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா (Team India) வென்றது. தென்னாப்பிரிக்கா உடனான டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்த நிலையில், ஓடிஐ தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் டிரா செய்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை தற்போது நடைபெறுகிறது. மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது. 

இந்திய அணி வரும் ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. தன்னுடைய வலுவான டி20 அணியை அமைக்கும் முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் சர்வதேச டி20 அணிக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இருப்பினும், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சிராஜ், பும்ரா ஆகிய மூத்த வீரர்கள் டி20 அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். 

ஷ்ரேயாஸிற்கு வாய்ப்பில்லை

அதில், ஷ்ரோயாஸ் ஐயர் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய டி20 தொடரில் துணே கேப்டனாக செயல்பட்டார். ஆனால், அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா தொடரில் அப்படியே கழட்டிவிடப்பட்டார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணியிலும் இவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. மிடில் ஆர்டரில் ஏற்கெனவே, திலக் வர்மா, தூபே, ஜித்தேஷ் சர்மா, ரின்கு சிங் என பல வீரர்கள் ஃபார்மில் உள்ளனர். இதில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு வரும்பட்சத்தில் ஷ்ரேயா் ஐயருக்கு பிளேயிங் லெவனில் மட்டுமல்ல டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்றுதான் கூறப்படுகிறது. 

இதுகுறித்து, ஷ்ரேயாஸிடம் நேற்று மும்பை ரஞ்சி கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஷ்ரேயாஸ் ஐயர்,”இப்போது நான் தற்போதைய போட்டி குறித்தே யோசிக்கிறேன். நான் ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாட வேண்டும் என கோரப்பட்டது, அதை முடித்துவிட்டேன். நான் வந்தேன், நான் செயல்படுத்தினேன், அதனால் நான் விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

டெஸ்ட் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ்

(டி20 அணியில் தகுதிபெறாதது) என் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று, என்னால் அதில் கவனம் செலுத்த முடியாது. இங்கு வந்து போட்டியை வெல்வதில்தான் எனது கவனம் இருந்தது, அதைத்தான் நாங்கள் இன்று செய்தோம். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைப் பற்றி சிந்திக்காமல், ஒரு நேரத்தில் ஒரு போட்டி குறித்து யோசிப்பது முக்கியம். அணி முதல் இரண்டு ஆட்டங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும், அதன்பிறகு மற்ற ஆட்டங்களை எதிர்நோக்க வேண்டும் என்பதே குறிக்கோள்” என்றார். 

டி20 அணியில் இவருக்கு இடமில்லை என்றாலும் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடரில் இவரின் மிடில் ஆர்டர் பேட்டிங் இந்தியாவுக்கு தேவையானது. புஜாரா, ரஹானே ஆகியோரின் வெற்றிடத்தை இவர்தான் நிறைவேற்ற வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸ் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடர் சொந்த மண்ணில் நடப்பதால் கூடுதல் சாதகம் எனலாம். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக செயல்படும் ஷ்ரேயாஸ், இந்த முறை அதில் எப்படி செயல்படுகிறாரா அதன் அடிப்படையில் அவர் டி20 உலகக் கோப்பை அணிக்கு தேர்வாக வாய்ப்புள்ளது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.