Shivam dube: இந்த ஆண்டு டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மா இல்லை என்றால் ஹர்திக் பாண்டியா தான் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு முழுவதும் இந்திய டி20 அணியை ஹர்திக் பாண்டிய வழிநடத்தி வந்தார். தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக ஹர்திக் விளையாடாததால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது தலைமையில் இந்தியா தொடரை வென்றுள்ளது. தற்போது டி20 உலக கோப்பையில் ஹர்திக் விளையாடுவாரா என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடவில்லை. அவர் எப்போது குணமாவார் என்று யாருக்கும் தெரியாது.
இப்படி தொடர் காயங்களால் ஹர்திக் பாண்டியா அவதிப்படுவதால் இந்திய கிரிக்கெட் வாரியம் வேறு வீரர்களின் மீது கவனம் செலுத்தி வருகிறது. யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் கடந்த ஆண்டு பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இல்லை. ஆனால் அவர்கள் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட உள்ளனர். குறிப்பாக சிவம் துபே மீது பிசிசிஐ அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில், அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டர். எனவே ஹர்திக்கிற்கு மாற்றாக ராகுல் டிராவிட், ரோகித் சர்மா அவரை நினைக்கிறார்கள்.
“சிவம் துபேக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று தேர்வுக் குழுவும், நிர்வாகமும் விரும்புகின்றன. அவர் எவ்வளவு அதிகமாக பந்துவீசுகிறாரோ, அவ்வளவு சிறப்பாக பந்துவீச வேண்டும். பிறகு அவரது இடம் அணியில் நிச்சயம் இருக்கும். சிவம் துபே பேட்டிங்குடன், நன்றாக பவுலிங்கும் போட்டால் அவருக்கு அணியில் நிச்சயம் வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் லில் சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் வாய்ப்பு உறுதி. ஹர்திக்கிற்கு ஷிவம் துபே ஒரு சிறந்த மாற்றாக இருக்க முடியும்” என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவரது உடல் அமைப்பு மற்றும் பேட்டிங் பாணியைப் பார்த்து, பலர் ஷிவம் துபேவை யுவராஜ் சிங்குடன் ஒப்பிட்டனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த சிவம் துபே பேசுகையில், “என்னை பலர் யுவராஜுடன் ஒப்பிடுவது எனக்குத் தெரியும். இது மிகவும் பெருமையாக இருக்கிறது, ஆனால் இந்த ஒப்பீடு சரியல்ல. என் கேரியர் இப்போதுதான் ஆரம்பித்துவிட்டது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். நன்றாக விளையாட முயற்சிக்கிறேன். அதற்கான பலன் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வரும் துபே பேட்டிங் மட்டுமின்றி, தற்போது பந்துவீச்சிலும் கவனம் ஈர்க்கிறார். கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணம். டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவுக்கு ஒரே ஒரு சர்வதேச போட்டி மட்டுமே உள்ளது. அதன் பிறகு ஐ.பி.எல் தான். இந்த சீசனில் துபே நன்றாக விளையாடினால் நிச்சயம் ஹர்திக்கிற்கு மாற்றாக அல்லது கூடுதல் வீரராக அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.