புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள பண்பாட்டு மைய கருத்தரங்க அறையில், ‘தொழில் திறன் மேம்பாட்டில் உளவியல் பயன்பாடு’ குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று துவங்கியது. அதை துவக்கி வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் அதிகமானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதை நான் தொடந்து வலியுறுத்தி வந்துள்ளேன், நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். தமிழகத்திற்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றார்கள், ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பது இல்லை. நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றார்கள். அதிலும் இளம் தலைவர்கள் தேவைப்படுகின்றார்கள்.
அதனால் விஜய் வந்ததை வரவேற்கின்றேன். இன்னும் நிறைய தலைவர்கள் வரவேண்டும். ஆளுநராக தொடர்வதா, தேர்தலை சந்திப்பதா என்பதை முடிவு செய்து விட்டு உங்களுக்கு தெரிவிப்பேன். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இல்லா நிலை பட்ஜெட் என்கின்றார் முதல்வர் ஸ்டாலின். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கெல்லாம் போகிறார் என்று கூறுகிறார்கள். ஒரு மாநிலத்தை சேர்ந்த முதல்வர் அடிக்கடி வெளிநாடு போகும் போது, நாட்டையே நிர்வகிக்கும் பிரதமர், முதலீட்டை ஈர்க்க எத்தனை தடவை போக வேண்டும் ? தற்போது நாட்டின் வளர்ச்சிக்காக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நடக்கும் சில விஷயங்களை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் நடந்துள்ள சில பிரச்னைகளால் அவர்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்” என்றார்.