ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதன்படி, 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, 7,500 ரூபாவாகவும், 2,000 ரூபாவாக இருந்த முதியோர் உதவித்தொகை, 3,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது அஸ்வெசும நிவாரணம் பெறும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள்; இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அடையாளம் காணப்பட்டு, அதன் பின்னர் ஏப்ரல் 01 முதல் அவர்களுக்கும் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும்.
இதேவேளை, மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த அஸ்வெசும பலன்களின் கீழ் உள்ள அவதானத்திற்குள்ள மற்றும் இடைநிலைப் பிரிவினருக்கான கொடுப்பனவுகள் டிசம்பர் 31ஆம் திகதி வரை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். எதிர்காலத்தில், அந்த இரண்டு குழுக்களும் 8 இலட்சம் குடும்பங்களைக் கொண்ட ஒரு அவதானத்திற்குள்ளாகிய குழுவாகக் கருதப்பட்டு அவர்களுக்கு 5,000 கொடுப்பனவாக வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.