அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை முடிந்த மூன்று வாரம் ஆகும் நிலையில், ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக ஓராண்டுக்கும் மேலும் விசாரணையில் இருக்கும் மனுவில் வாரணாசி நீதிமன்றம் அண்மையில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
குறிப்பாக, காசி விஸ்வநாதர் கோயிலின் ஒருபகுதியை இடித்துவிட்டுதான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதத்தை இந்து அமைப்பினர் முன்வைக்கும் சூழலில், மசூதிக்குள் குறிப்பிட்ட அந்த ஒரு பகுதியில் இந்துக்கள் வழிபடலாம் என வாரணாசி நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மசூதிக்குள் இந்துக்கள் வழிபாடு நடத்தினர்.
இந்த விவகாரத்தைப் போலவே மதுரா மசூதி விவகாரமும் இன்னொருபக்கம் சென்றுகொண்டிருக்கிறது. மதுராவைப் பொறுத்தவரையில், அயோத்தியில் (பாபர் மசூதி) ராமரைப் போல, இங்கு மசூதி இருக்கும் இடத்தில்தான் கிருஷ்ணர் பிறந்தார் என தீவிர வலதுசாரியினர் கூறுகின்றனர். இந்த நிலையில், தாங்கள் மூன்று கோயில்களைக் கேட்பதாகவும் (பாபர் மசூதி, ஞானவாபி மசூதி, மதுரா மசூதி), கிருஷ்ணர் மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுகையில் இதனைத் தெரிவித்த யோகி ஆதித்யநாத், “மகாபாரதத்தில் போர் தொடங்குவதற்கு முன், பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களைக் கொடுக்கும்படி துரியோதனனை கிருஷ்ணர் வற்புறுத்தினார். அதுபோல, கடவுளின் அவதார இடங்களான அயோத்தி, காசி, மதுரா ஆகிய எங்களின் மூன்று புனித தலங்களைக் கேட்கிறோம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். பின்னர், அயோத்தியில் கும்பாபிஷேகம் முடிந்ததும், நாம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று இரவோடு இரவாகத் தடுப்புகளை அகற்றினார் நந்திபாபா (ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கியது). அதுபோல, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதமாக இருக்கிறார் (மதுரா மசூதி)” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY