ரூ.16,000 கோடியில் பாஜக வசம் ரூ.10,122 கோடி – தேர்தல் பத்திரம் மூலம் 2022 வரை எந்தக் கட்சிக்கு எவ்வளவு?

புதுடெல்லி: 2022 வரை தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் ரூ.16,000 கோடியை பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்றும், வங்கிகள் அவற்றை விற்பனை செய்ய தடை விதிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், 2016 முதல் 2022 வரை ரூ.16,000 கோடி அளவில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2016-2022 வரை 28 ஆயிரத்து 30 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16,437.63 கோடி.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக வருவாயை ஈட்டிய கட்சியாக பாஜக உள்ளது. இந்த கட்சி இந்த காலகட்டத்தில் ரூ.10,122 கோடியை ஈட்டியுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் இது ஏறக்குறைய 60 சதவீதமாகும். இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்தக் கட்சி இந்த காலகட்டத்தில் ரூ.1,547 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. இது மொத்த தொகையில் சுமார் 10 சதவீதமாகும். மூன்றாம் இடம் பிடித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் ரூ.823 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.

ரூ.367 கோடியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4-ம் இடத்திலும், ரூ.231 கோடியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி 5-ம் இடத்திலும், ரூ.85 கோடியுடன் பகுஜன் சமாஜ் கட்சி 6-ம் இடத்திலும், ரூ.13 கோடியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7-ம் இடத்திலும் உள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன கூறுகிறது? – “தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரம் நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமாக உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திர முறை உள்ளது.

தேர்தல் பத்திரம் முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால், அதனை ரத்து செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.

அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.

தேர்தல் பத்திரம் நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6-க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி: கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.

இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடித்தது. கடந்த ஆண்டு முதல் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.