சென்னையச் சேர்ந்த ஹெல்த் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான முனியா டெக்னாலஜிஸ் (Muniah Technologies), ‘வா தல’ இணையதளம் (Va Thala Web) மற்றும் ‘வா தல’ செல்போன் செயலி (Va Thala Mobile App) ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் முன்னாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர், பத்ம பூஷன் விருதுபெற்ற டாக்டர் டி. இராமசாமி, அண்மையில் இதை அறிமுகப்படுத்தினார். இது, மருத்துவம் சார்ந்த (தீவிரமற்ற நோய்) சுகாதார சேவையை நாடும் நோயாளிகளுடன் உரிமம் பெற்ற மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், செவிலியர்களை இணைக்கிறது.
இந்த செயலியில் மருத்துவர்கள் இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். உரிமம் பெற்ற கால்நடை மருத்துவர்கள், யோகா ஆசிரியர்களும் இதில் இணையலாம்.
நோயாளிகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள், 5 முதல்10 கி.மீ. சுற்றளவில் உள்ள தகுதிவாய்ந்த சுகாதார நிபுணர்களிடமிருந்து வீட்டிலிருந்தே சுகாதார சேவைகளைப் பெற இந்த செயலி உதவுகிறது. அத்துடன் மருத்துவமனைக்கு பயணம் செய்தல், நீண்ட காத்திருப்பு நேரம், மருத்துவமனை செல்வதால் ஏற்படும் தொற்றுநோய் அபாயங்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க உதவுகிறது.
இதுகுறித்து ‘வா தல’ செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி நவீத் அகமது கூறியதாவது: எங்களுடைய தொழில்நுட்பமானது சமீபத்திய ஜி.பி.எஸ்.(GPS), ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்துடன் இணக்கமாகச் செயல்படுகிறது. இது சுகாதார நிபுணர்கள், அருகில் வசிக்கும்நோயாளிகளுக்கு மதிப்பை உருவாக்குகிறது. எங்கள் தளத்தின் மூலம், தங்களின் அனுபவ காலம், தகுதி மற்றும் சேவைகளை வெளிப்படுத்துவதற்கு இணையவழி சுயவிவரத்தை மருத்துவர்கள் உருவாக்கலாம். மேலும் ஓய்வாகஉள்ள நேரத்தில் நோயாளிகளை சந்திப்பதற்கான கோரிக்கைகளைப் பரிசீலிக்கலாம்.
மருத்துவர்கள் தாங்களே ஆலோசனைக் கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம். சுருக்கமாக, ‘வா தல’ செயலி மூலம் தங்கள் வேலை நேரம் அல்லது ஓய்வு நேரத்தில் தன்னிச்சையாக சேவை வழங்கி மருத்துவர்கள் வருவாய் பெற முடியும்.
இருப்பிடம், நிபுணத்துவம், பாலினம், மொழி, கிடைக்கும் நேரம், பிற நோயாளிகளிடமிருந்து மதிப்புரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உரிமம் பெற்ற மருத்துவர்களை நோயாளிகள் தேடலாம். மேலும் உடனடியாக வீட்டுக்கு வருகை தருதல் அல்லது கிளினிக் வருகைகளையும் அவர்கள் திட்டமிடலாம். காய்ச்சல் மற்றும் நீரிழிவு கால் புண்களுக்கான மருந்து கட்டுதல் போன்ற முக்கியமான அல்லது அவசரமற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு இந்த சேவைகளைப் பெறலாம். தங்கள் மருத்துவப் பின்னணி, மருந்துச் சீட்டுகள், ஆய்வக அறிக்கைகள் ஆகியவற்றை இணைய வழியில் நோயாளிகள் நிர்வகிக்கலாம். அத்துடன் உடனடியாக மருத்துவர்களுடன் தகவலைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.