சென்னை: புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் விதிகளை மீறி ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் பொது இடங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 8-ம் தேதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சென்னை மெரினாகடற்கரையில் ஆய்வு மேற்கொண்டு வடமாநிலஇளைஞர்கள் விற்பனை செய்த பஞ்சுமிட்டாய்களை பறிமுதல் செய்தனர். அந்த பஞ்சுமிட்டாய்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில், பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும். இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். புற்றுநோயை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் இவற்றை பயன்படுத்தக்கூடாது” என்றனர்.
இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரோடமைன் பி (Rhodamine B) எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டங்களின்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006-ன்படி செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். இது குறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையரால், அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.