3 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

முனிச்,

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் சென்றுள்ளார். இந்நிலையில், இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடுகளான போலந்து, பெல்ஜியம் மற்றும் போர்ச்சுகல் நாடுகளை சேர்ந்த சக மந்திரிகளை சந்தித்து பேசினார்.

இதில், போர்ச்சுகல் வெளியுறவு மந்திரி ஜோவாவோ கிராவினோவுடனான சந்திப்பில், சமீபத்திய உலகளாவிய வளர்ச்சிகளை பற்றிய பார்வைகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இதேபோன்று, போலந்து வெளியுறவு மந்திரி ரேடோஸ்லா சிகோர்ஸ்கி உடனான சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி இருவரும் விவாதித்தனர். இதில், உக்ரைன் போர் பற்றியும் ஆழ்ந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

பெல்ஜியம் வெளியுறவு மந்திரி ஹத்ஜா லாபீப் உடனான சந்திப்பில், இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையேயான இருதரப்பு உறவுகளில் காணப்படும் முன்னேற்றம் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இந்த விவரங்களை மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவருடைய எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 16-ந்தேதி தொடங்கிய இந்த பாதுகாப்பு மாநாடு ஞாயிற்று கிழமையுடன் நிறைவடைகிறது.

உலகில் காணப்படும் பாதுகாப்பு சவால்களை பற்றி உயர்மட்ட அளவிலான விவாதங்களை நடத்துவதற்கான ஒரு தனித்துவ வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.