கோவை : ”மேகதாது அணை விவகாரத்தில் சிறு இடைஞ்சல் ஏற்பட்டாலும் தமிழகத்துக்காக காங்., போராடும்,” என, அக்கட்சியின் தேசிய செயலர்களில் ஒருவரான ஜெயகுமார் கூறினார்.
அகில இந்திய காங்., கட்சியின் தேசிய செயலர் ஸாரிதா, கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
பத்தாண்டு கால ஆட்சியில், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.
ஆனால், ஒருவருக்கும் வழங்கவில்லை. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 6,566 கோடி ரூபாயை பா.ஜ., பெற்றிருக்கிறது. காங்., 1,123 கோடி ரூபாயை மட்டும் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது, மலிவான முறையில் பா.ஜ., அரசு தாக்குதல் நடத்துகிறது. 10 ஆண்டுகளாக செய்து வரும் அநீதியை, மக்களிடம் சேர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு தேசிய செயலர் ஜெயக்குமார் கூறுகையில், ”லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தி வருகிறோம். காங்.,கின் பலத்தை குறைக்காமல், அதற்குரிய இடத்தை தி.மு.க., ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம். தி.மு.க., அரசுக்கு மக்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லை. கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியை விட சிறப்பாக ஆட்சி செய்கிறது,” என்றார்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ”காங்கிரஸ் தேசியக் கட்சி. மாநில உரிமைகளை பாதுகாக்க, கர்நாடக அரசு முயல்கிறது. தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், தமிழக காங்கிரஸ் கமிட்டி எதிர்ப்பு தெரிவிக்கும். சிறு இடைஞ்சல் ஏற்பட்டாலும், தமிழக மக்களுக்காக காங்கிரஸ் போராடும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement