மும்பை: எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம், ஒருமாத காலத்தில் இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்துக்கு 31 ஆயிரம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26 முதல் இந்த ஆண்டு ஜனவரி 25 வரையிலான ஒரு மாத காலத்தில், சிறார் ஆபாசப் படங்களை பகிர்வது, அனுமதியின்றி எடுக்கப்பட்ட நிர்வாணப் படங்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இந்தியாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்துக்கு 31 ஆயிரம் கணக்குகளை எக்ஸ் சமூக வலைதளம் நீக்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டவிதிகளின்படி பதிவான 2,525 புகாரிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளார். நீக்கப்பட்டவற்றில் 1,945 கணக்குகள் தங்கள் பக்கங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து பதிவிட்டவை என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு நவ.26 முதல் டிச.25 வரை இந்தியாவைச் சேர்ந்த 2 லட்சத்து 27 ஆயிரம் எக்ஸ் கணக்குகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எக்ஸ் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் பயனர்களிடம் இருந்து புகார்களை பெற்று வருகிறது. அவற்றின் அடிப்படையில் எக்ஸ் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீதிமீறலின் தன்மையை பொறுத்து, நிரந்தர நீக்கம், தற்காலிக நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.