சென்னை: எதிர்வரும் மார்ச் 5-ம் தேதி நத்திங் நிறுவனம் ‘நத்திங் போன் (2a)’ ஸ்மார்ட்போனை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த போனை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ Carl Pei தெரிவித்துள்ளார்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார்.
இதுவரை நத்திங் போன் (1), நத்திங் போன் (2) சந்தையில் வெளியிட்டுள்ளது. விரைவில் நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது நத்திங் போன் (1)-ன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையும் அதிகம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மொபைல் போன் பயனர்களை டார்கெட் செய்து ரூ.30,000-க்கும் குறைவான விலையில் இந்த போன் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
எக்ஸ் தளத்தில் இது குறித்து பயனர் எழுப்பிய கேள்விக்கு, ‘ஆம்’ என Carl Pei அறிவித்துள்ளார். அதோடு தனது எக்ஸ் தள பெயரை ‘Carl Bhai’ என அவர் மாற்றியுள்ளார். இந்தியில் Bhai என்றால் சகோதரர் என அர்த்தம். பல்வேறு மொபைல் போன் நிறுவனங்கள் இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்ய ஆர்வம் செலுத்தி வருகின்றன. நத்திங் நிறுவனமும் சென்னையில் உற்பத்தி கூடத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Yup
— Carl Bhai (@getpeid) February 18, 2024
We want to sell more phones bhai https://t.co/c9mAH7NGWP
— Carl Bhai (@getpeid) February 18, 2024