சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இனக்குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள், மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், மக்கள் தமது பிள்ளைகளையும் குடும்பங்களையும் இழக்கச் செய்யும் பொய்யான மற்றும் பிழையான பிரசாரங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை தடுக்க அரசாங்கம் விரும்புவதாகவும், அவற்றை தடுப்பதே சமூக ஊடக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…
மக்கள் தாம் விரும்பும் எந்தவொரு விடயத்தையும் தங்கள் பெயரில் சுதந்திரமாக முன்வைக்க இந்த சட்டத்தில் எந்த தடையும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் எமது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டதிட்டங்கள் தொடர்பான உரிமை சட்டத்தை உருவாக்கும் இலங்கை பாராளுமன்றத்திற்கே உண்டு என்றும் அதற்கு தேவையான சட்டமூலம் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் 14 நாட்களுக்குள் எவரும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.