காஷ்மீரில் ரூ.32,000 கோடி திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

ஜம்மு: தமிழகத்தில் ஐஐஐடி-டிஎம்மில் புதிய வளாகம், ஜம்மு-காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

ஜம்மு-காஷ்மீரில் கல்வி, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலைகள் உள்ளிட்ட துறைகளில் ரூ.32,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை நேற்று ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். ஜம்மு-காஷ்மீரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 1,500 அரசு ஊழியருக்கான பணி நியமனக் கடிதங்களையும் பிரதமர் மோடி வழங்கினார்.

விக்சித் பாரத்”, விக்சித் ஜம்மு திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில்வே திட்டங்களில் பனிஹால்-காரி-சம்பர்-சங்கல்தன் (48 கி.மீ.) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா-நகர்-பனிஹால்-சங்கல்தன் (185.66 கி.மீ.) வழித்தடமும் அடங்கும். பள்ளத்தாக்கின் முதல் மின்சார ரயிலையும், சங்கல்தன் மற்றும் பாரமுல்லா நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு தரமான மற்றும் முழுமையான சுகாதார சேவைகளை கிடைக்கச் செய்வதன் ஒரு பகுதியாக எய்ம்ஸையும் பிரதமர் திறந்து வைத்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த எய்ம்ஸ் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. “பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா என்ற மத்திய அரசின்திட்டத்தின் கீழ் இது கட்டமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,660 கோடி செலவில் 227 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட சுரங்க ரயில் பாதை: ஜம்மு நகரில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா இடையே ரயில் இணைப்பை வழங்கும் இந்தியாவின் மிக நீண்ட ரயில் சுரங்கப் பாதை நேற்று திறந்து வைக்கப்பட்டது. 12.77 கி.மீ நீளம் கொண்ட இந்த பாதை டி-50 என்று அறியப்படுகிறது. இது, காரி-சம்பருக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் ரூ.13,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே அடிக்கல் நாட்டினார். குறிப்பாக தமிழகத்தில் ஐஐஐடி-டிஎம் (காஞ்சி புரம்), உத்தர பிரதேசத்தில் ஐஐஎஸ் (கான்பூர்), உத்தராகண்ட் (தேவபிரயாக்) மற்றும் திரிபுராவில் (அகர்தலா) மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம், சத்தீஸ்கரில் ஐஐடி (பிலாய்), ஐஐடி (ஜம்மு),ஆந்திர மாநிலத்தில் ஐஐடி (திருப்பதி), ஐஐஎம் (விசாகப்பட்டினம்), ஐஐஎம் (புத்த கயா) கல்வி நிறுவனங்களின் நிரந்தர வளாகங்களும் அடங்கும்.

இதுதவிர, கேந்திர வித்யாலயாவின் 20 புதிய கட்டிடங்கள், ஜவஹர் நவோதயா வித்யாலயாவின் 13புதிய கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் திறந்துவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.