வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘அரசியலமைப்பு சட்டத்தின், 21வது பிரிவின் கீழ், குழந்தையை தத்தெடுக்கும் உரிமையை, அடிப்படை உரிமையாக கருத முடியாது’ என, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் – 2015ன் கீழ், மூன்றாவது குழந்தையை தத்தெடுக்க அனுமதி கோரி, ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள பெற்றோர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி உத்தரவிட்டதாவது:
அரசியலமைப்பின், 21வது பிரிவின் கீழ், தத்தெடுப்பு உரிமையை அடிப்படை உரிமையாக கருத முடியாது.
மேலும், தத்தெடுக்கும் பெற்றோர் யாரைத் தத்தெடுப்பது என்பதை தேர்வு செய்ய உரிமை கிடையாது.
முழுக்க முழுக்க குழந்தைகளின் நலனை மையப்படுத்தியே தத்தெடுப்பு திட்டம் செயல்படுகிறது. எனவே இதில், தத்தெடுக்கும் பெற்றோரின் உரிமைகளுக்கு இடமளிக்க முடியாது. குழந்தை இல்லாத தம்பதியர் மற்றும் ஒரு குழந்தை உள்ள பெற்றோர், சாதாரண குழந்தையை தத்தெடுக்கின்றனர்.
அதே சமயம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது என்பது குறைவாக உள்ளது. இந்த குழந்தைகளை அதிகளவில் தத்தெடுப்பது தான், இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதில் ஒரு சமநிலையான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். மேலும், குழந்தை தத்தெடுப்பதற்கு நிலவும் நீண்ட கால நடைமுறையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement