சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை தினங்களில் கூடுதல் கட்டண வசூலில் ஈடுபடுவதாகவும், எனவே, தொடர் சோதனை நடத்திசம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் அரசாணையை முறையாக அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,‘‘பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக அபராதம் மட்டுமே விதிக்கின்றனர். இதனால்தனியார் பேருந்துகளில் கூடுதல்கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது’’ என மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. கூடுதல்கட்டணம் வசூலி்க்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த சோதனையை தீவிரப்படுத்தஅதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் அதைசெயல்படுத்துவது இல்லை. வெறும் அபராதம் விதித்தால் மட்டும் போதாது. கூடுதல் கட்டணம்வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். அப்படிஎடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.