“கடும் நிதி நெருக்கடியிலும் மக்களுக்காக குடிநீர் திட்டங்கள்…” – முதல்வர் ஸ்டாலின் @ நெம்மேலி

சென்னை: “கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும் மக்களுக்காக நாம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர்த் திட்டங்களை தீட்டி வழங்கி வருகிறோம்” என நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்களுக்கு அர்ப்பணித்துப் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் பெரிய பங்கு இருக்கிறது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

நெம்மேலியில் ரூபாய் 1516 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்.24) தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய் முதல்வர் ஸ்டாலின், “நீர் இன்றி அமையாது உலகு! இதைவிட குடிநீரின் தேவையை யாராலும் விளக்கிச் சொல்லிவிட முடியாது. அதனால்தான், கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர்த் திட்டங்களை நாம் தீட்டி வழங்கி வருகிறோம்.

2006-2011 ஆட்சியில், நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்க 2007-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். அதற்கு பிறகு 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதை திறந்து வைத்தார்கள்.

இந்த நிலையத்திலிருந்து கிடைக்கின்ற குடிநீர் மூலம், வடசென்னையில் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து நெம்மேலியில், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு 2010-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். இந்த நிலையத்தின் மூலமாக, தென்சென்னையில் வசிக்கின்ற சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதனால்தான், பேரூரில், இது மாதிரியான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் நாள் அந்த நிலையத்திற்கும் நான்தான் அடிக்கல் நாட்டினேன். அந்த நிலையம், தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய இருக்கிறது. இந்த நிலையத்தை அமைக்கின்ற பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு நிச்சயமாக, உறுதியாக கொண்டு வரப்படும்.

நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் இன்றைக்கு நாட்டு மக்களுடைய பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையத்திலிருந்து பெறப்படுகின்ற குடிநீர் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் ஓ.எம்.ஆரில் இருக்கின்ற ஐ.டி. நிறுவனப் பகுதிகளில் இருக்கின்ற சுமார் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்திருக்கிறேன். நகராட்சி நிர்வாக இயக்ககத்தின் சார்பில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற 172 கோடி ரூபாய் மதிப்பிலான 52 திட்டப்பணிகளையும் திறந்து வைத்திருக்கிறேன்.

இதேபோல, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கின்ற 70 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பேரூராட்சிகள் இயக்கத்தை எடுத்துக்கொண்டால், 33 கோடி ரூபாய் மதிப்பிலான 12 திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மூன்று தனி குடிநீர்த் திட்டங்களையும், ஆறு கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் தொடங்கி வைத்திருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 533 கோடி ரூபாய்! 364 வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டிருக்கின்ற குப்பைகள், 648 கோடியே 38 இலட்ச ரூபாய் செலவில், உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கின்ற பணிக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், 813 கோடி ரூபாய் மதிப்பிலான 23 திட்டப்பணிகளுக்கும், பேரூராட்சி இயக்குநரகம் சார்பில், 238 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இப்படி மொத்தம் 1,802 கோடி ரூபாய் மதிப்பில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இவை எல்லாமே திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே திறக்கப்படும்.

சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் பெரிய பங்கு இருக்கிறது. சென்னை மாநகராட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக இரண்டு முறை இருந்தவன் நான்! அப்போது சென்னையின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி வழங்கி இருக்கிறோம். இன்றைக்கு சென்னையை நீங்கள் சுற்றி வரும்போது பார்க்கின்ற மேம்பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் கழக ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

பெருகி வருகின்ற மக்கள்தொகையை கணக்கில் கொண்டு, நெம்மேலியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாம் திட்டமிடுகின்ற கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படுவது மூலமாக, நாளொன்றுக்கு 750 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன்கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் நிறுவப்பட்ட மாநகரம் என்ற பெருமையை சென்னை மாநகரம் அடையும்.

இதன்மூலம் நம்முடைய அரசு, சென்னை மாநகர மக்களுடைய குடிநீர்த் தேவையை பூர்த்திசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. இதை சிறப்பாகவும், விரைவாகவும் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது.

ஏனென்றால், நமது திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும் வெற்று அறிவிப்புகள் வெளியிடுகின்ற அரசு கிடையாது! திட்டங்களை நிறைவேற்றி சென்னையின் தாகத்தை தீர்க்கின்ற அரசு.

நிறைவாக சொல்கிறேன், தலைவர் கலைஞராக இருந்தாலும் சரி, அவர் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக இருந்தாலும் சரி, நாங்கள் சொன்னதைத்தான் செய்வோம்! செய்வதைத்தான் சொல்வோம்! என்று கூறி விடைபெறுவதற்கு முன்னால், இங்கே நம்முடைய அமைச்சர ஒரு கோரிக்கையை வைத்தார்கள்.

சென்னை மாநகராட்சியின் கட்டடத்துக்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு புதிய கட்டிடத்திற்கு தலைவர் கலைஞர் பெயரை சூட்டவேண்டும் என்று, கலைஞருடைய நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, நிச்சயமாக அந்த கட்டடத்துக்கு “கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்று பெயர் சூட்டப்படும் என்பதைத் தெரிவித்து விடை பெறுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.