விராட் கோலி இப்போது குடும்பத்துடன் லண்டனில் இருக்கிறார். மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் வாமிகா, அண்மையில் பிறந்த மகன் அகோய் ஆகியோருடன் அவர் அங்கு இருக்கிறார். லண்டன் வீதிகளில் விராட் கோலி சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஜாலியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார் விராட் கோலி. அவர் அங்கிருந்து எப்போது இந்தியா திரும்ப இருக்கிறார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
விராட் கோலி விலகல்
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பிய விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என கேட்டுக் கொண்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுப்பதாகவும் அவர் பிசிசிஐயிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அப்போதே, அனுஷ்கா சர்மா கர்ப்பபமாக இருப்பதாகவும், விரைவில் குழந்தையை பெற்றெடுக்க இருப்பதால் அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது. அது இப்போது உறுதியாகிருக்கிறது.
அண்மையில் இந்த தகவலை விராட் கோலியே தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து கொண்டார். தங்களுக்கு அன்பு மகன் பிறந்திருப்பதாகவும், அவருக்கு அகாய் என பெயரிட்டிருப்பதாகவும் விராட் கோலி கூறியிருந்தார். மேலும், மகள் வாமிகா தனது சகோதரனை மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
எப்போது திரும்புகிறார் விராட் கோலி?
இந்நிலையில் இப்போது ஐபிஎல் அட்டவணை வெளியாகியுள்ளதால், 10 அணிகளும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராட் கோலி இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே நடக்கிறது. இதனையொட்டி ஆர்சிபி அணி பயிற்சி மார்ச் முதல் வாரத்தில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இப்போது லண்டனில் இருக்கும் விராட் கோலி நேரடியாக ஆர்சிபி அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த தகவலை ஆர்சிபி அணிக்கும் அவர் தெரிவித்துவிட்டதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகிறது.