சத்தீஷ்கார்: பாதுகாப்பு படையினருடன் மோதல்; 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் அடர்ந்த வன பகுதிகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் ஊருக்குள் புகுந்து கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அரசியல் தலைவர்களை தாக்குவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால், நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பிஜாப்பூர் மாவட்டத்தில் ஜங்கிலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட வன பகுதியில், பதுங்கியுள்ள நக்சலைட்டுகளை தேடி மாவட்ட ரிசர்வ் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் தனித்தனியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சோட்டே துங்காலி வன பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த ரோந்து குழுவினர் வந்தபோது, நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த சம்பவத்தில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். உயிரிழந்த 4 நக்சலைட்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.