ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி

திருவனந்தபுரம்/பெங்களூரு: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம்விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வருகை தந்தார். அவரை கேரள ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன், இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு ரூ.1,800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ட்ரைசோனிக் காற்று சுரங்கம், மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் கட்டப்பட்டுள்ள செமி கிரையோஜெனிக் ஒருங்கிணைந்த இன்ஜின் மற்றும் நிலை பரிசோதனை மையம், ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி ஆகிய 3 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர் மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன்,விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லாஆகிய நால்வரும் அடுத்த ஆண்டுவிண்வெளிக்கு செல்வது அதிகாரப்பூர்வமாக‌ அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி நால்வருக்கும் ககன்யான் திட்டத்தின் லோகோ பேட்ஜை அணிவித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்களை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு சுமந்து செல்லும் நான்கு சக்திகள்ஆவர். இவர்களின் பெயர் 21-ம்நூற்றாண்டின் வரலாற்றில் பொறிக்கப்படும். ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படவிருக்கும் பொருட்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

400 கிமீ தூரத்தில் 3 நாட்கள்: ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ இறங்கி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ககன்யான் திட்டத்தை அறிவித்து, மனிதர்களை அனுப்புவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 4 வீரர்கள் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். அதன்படி 4 வீரர்களும் தரையில் இருந்து 400 கிமீ தூரம் கொண்ட விண்வெளி சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கு 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு மீண்டும் பத்திரமாக திரும்பி வருவார்கள்.

ரஷ்யாவில் பயிற்சி: இந்த திட்டத்தின் கீழ் விண் வெளிக்கு அனுப்புவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூரு விமானப்படை தளத்தில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்களை தேர்வு செய்தனர்.அவர்களுக்கு பல்வேறு தேர்வுகளை நடத்தி இறுதியாக 12 பேரை தேர்வு செய்தது.

அவர்களுக்கு பெங்களூரு இஸ்ரோ மையத்தில் மட்டுமல்லா மல் ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

விண்வெளி செல்லும் தமிழர்: விண்வெளி செல்லும் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் கடந்த 1982-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம்தேதி சென்னையில் பிறந்தார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) இருந்து தேர்ச்சிபெற்றவர் ஆவார். விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றார்.

கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி இந்திய விமானப்படையின் போர்-விமானப் பிரிவில் அஜித் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார். சுகோய், மிக், ஜாகுவார், டோர்னியர், ஏஎன்-32 என பல்வேறு வகையான விமானங்களை அவர் இயக்கியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.